Translate this blog

Search This Blog

Tuesday 15 September 2015

பலன் தரும் பசும்தீவன வகைகள்..!


நமது நாட்டில் வேளாண்மை மற்றும் கால்நடைகள் இணைந்த கலப்புப் பண்ணை முறையே கையாளப்பட்டு வருகிறது. தரமான கால்நடை வளர்ப்புக்கும், அதிக வருமானம் பெறவும் பசுந்தீவனப் பயிர்களை சாகுபடி செய்வது அவசியம்.
கால்நடைகளுக்கு புரதம், நார்ச்சத்து, உயிர் மற்றும் தாதுச் சத்துகளை அளிப்பதுடன் கால்நடைகளின் உடல் வெப்பநிலைக் கட்டுப்பாட்டிலும் பெரும் பங்கு வகிக்கிறது பசுந்தீவனம். சரியான இனப் பெருக்கத்துக்கும் இது இன்றியமையாதது.
பசுந்தீவனத்தை பயிர் செய்வதன் மூலம் நிலத்தின் மண்வளம், மண்ணின் நீர் தாங்கும் திறன் அதிகரிக்கிறது.
களைகள் மற்றும் தேவையற்ற புல், பூண்டுகளின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.
பயறு வகை பசுந்தீவனங்களை வளர்ப்பதால் மண்ணில் தழைச்சத்தின் வளம் கூடுகிறது.
பசுந்தீவனப் பயிர்களை தேர்ந்தெடுக்கும் முன் முக்கிய அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
பயிர் சாகுபடி முறை எளிதாக இருக்க வேண்டும்.
குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் தர வேண்டும்.
ஊட்டச்சத்து செறிவுள்ளதாகவும் இருக்க வேண்டும். காலநிலை மற்றும்
மண் அமைப்பு பாதகமாக மாறினாலும், விளைச்சலில் பாதிப்பு இருக்கக் கூடாது.
பூச்சி மற்றும் நோயால் பாதிக்கப்பட கூடாது.
பசுந்தீவன வகைகள்:
-----------------------------
புல்வகைத் தீவனப் பயிர், தானிய வகைத் தீவனப் பயிர், பயறு வகைத் தீவனப் பயிர், மர வகைத் தீவனப் பயிர் ஆகியவை பசுந்தீவனங்களாகும்.
புல் வகை:
----------------
இந்தத் தீவனத்தில் புரதச்சத்து 1.5 சதம் முதல் 2 சதம், நார்ச்சத்து 6.25 சதம் முதல் 9 சதம் வரை இருக்கும்.
இறவைப் யிராக நேப்பியர், கம்பு ஒட்டுப்புல் கோ-1, கோ-2, கோ-3 பயிரிடலாம். கினியாப் புல், பாரா புல், கொளுக்கட்டைப் புல் பயிரடலாம.
மானாவரியாக கொளுக்கட்டை புல், தீனாநாத் புல் ஆகியவை பயிரிடலாம்.
தானிய வகை:
--------------------
இறவையாக மக்காச் சோளம் பயிரிடலாம்.
மானாவரியாக தீவனச் சோளம், தீவனக் கம்பு பயிரிடலாம்.
பயறு வகை:
-----------------
பசுந்தீவனத்தில் பயறு வகைகள் முக்கியமானதாகும். ஏனெனில், இந்த வகை தீவனத்தில் 3 சதம் முதல் 4 சதம் வரை புரதச் சத்தும், கால்சியமும் செறிந்துள்ளது.
தானிய வகை பசுந்தீவனத்துடன், பயறு வகை தீவனத்தை 70:30 விகிதத்தில் கலந்து கொடுப்பது அவசியம்.
பயறு வகையால் வேர் மூலம் மண்ணில் நைட்ரஜன் நிலைப்படுத்தப்பட்டு தழைச்சத்து வளம் அதிகரிக்கிறது.
பயறு வகைகளில் இறவையாக வேலி மசால், முயல் மசால், தீவனத் தட்டைப் பயறு, காராமணி, துவரை பயிரிடலம். மானாவரியாக முயல் மசால், சிராட்ரோ, டெஸ்மோடியம், சென்ட்ரோ, சங்கு புஷ்பம், கொள்ளு, துவரை பயிரிடலாம்.
குளிர்ப் பிரதேசங்களில் பெர்சீம், மொச்சை வகைகளைப் பயிரிடலாம்.
கலப்பு பயிரிடுதல் முறை:
-----------------------------------
பயறு வகை தீவனப் பயிர்களையும், தானிய வகைத் தீவனப் பயிர்களையும் கலப்புப் பயிராகக் கலந்து பயிரிடும்போது தனித்தனியே கிடைக்கும் மகசூலை விடவும் கூடுதலாக மகசூல் கிடைக்கும்.
கோ 1, 2, 3 ஆகியவற்றை 3 வரிசையாகவும், வேலி மசால் ஒரு வரிசையாகவும் கலந்து பயிரிடலாம்.
தீவனச் சோளம் 2 வரிசை, சோயா மொச்சை ஒரு வரிசையாகவும் பயிரிடலாம்.
கொளுக்கட்டை புல் 3 வரிசை, முயல் மசால் ஒரு வரிசையாகவும் பயிரிடலாம்.
ref: https://www.facebook.com/groups/1403706829955435/
posted by ganesh-9843479843

No comments:

Post a Comment